Wednesday, December 9, 2009

உண்மையின் தத்துவம்.


காலம்: வரலாற்றின் தத்துவம் உண்மை


மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத் தொடரை முன்வைத்து ஒரு பார்வை.


கி.பி. 1755 தொடங்கி 1947 வரை இந்திய தேசவிடுதலைப் போர்வரலாறு என்கிற பெரும்தளத்தைப்பின்னணியாகக் கொண்டுதமிழகத்தில்திருநெல்வேலிச்சீமையின்அருகேயுள்ள நெற்கட்டும்செவற்பாளையத்திலே, கிழக்கிந்தியக்கம்பெனிக்கு எதிராகப்புழுதியைக் கிளப்பியபூலித்தேவனில்தொடங்கி காந்தியைக்கோட்சே சுட்டுக்கொள்வது வரையில் 37 பகுதிகளாகஆய்வுத்தொகுப்பாக்கஆவணப்படமாகக் காலம்உருவாக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக வரலாற்றியல் பிரிவு, அரசின் தொல்லியல் பிரிவு இவைகளினால் மட்டுமே செய்யக்கூடிய இந்தக் கடும் பணியை தமிழக ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சியாக தனது ஜெகமதி கல்வி அறக்கட்டளையின் சார்பாக ஜெகமதி கலைக்கூடத்தின் மூலம் தயாரித்திருக்கிறார் சி. தீனதயாளபாண்டியன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் பலபகுதிகளிலும்,பல கால கட்டங்களிலும் நடந்திருக்கிற இந்த நீண்ட நெடிய வரலாற்றைக் கோர்க்கும் சரடு எதுவாக இருக்கமுடியும் என்பதைக் கண்டுபிடிக்கிற அடங்கா ஆய்வுத்தேடலோடு, தனது கடுமையான உழைப்பையும், ஆர்வத்தினையும், அர்ப்பணிப்பையும் கொட்டி,இப்படத்தினை இயக்கியிருக்கிறார், நமக்கு மருதிருவர், மற்றும் ரேகை ஆகிய ஆவணப்படங்கள் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிற இயக்குநர் தினகரன்ஜெய்.

முன்னர் நடந்து முடிந்துவிட்ட, சுமார் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை, இன்று நாம் நமது கண்ணோட்டத்தில் அணுகுகிறோம். வரலாற்றுச் சான்றாதாரங்கள் மூலமாகவே நாம் வரலாற்றின் உண்மையை நெருங்கமுடியும். இந்தச் சான்றாதாரங்கள் எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்குக் கூடுதலாகவே, வரலாறு குறித்த நமது கண்ணோட்டமும் அவசியமானதாகும்.

அடிமை நாட்டின் தேசத்துரோகிகள்தான், சுதந்திரநாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள். ஆளும் அரசிற்கு பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் இருப்பவர்கள்தான், ஆளப்படுகிற மக்களுக்கு விடுதலைப்போராளிகளாக இருக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நமக்குத் தெளிவாகப் புரியவைப்பது, வரலாறு குறித்த நமது கண்ணோட்டம்தான்.

பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு பகத்சிங் ஒரு தேசத் துரோகக் கிரிமினல் குற்றவாளி. மோகந்தாஸ் காந்திக்கோ அவன் ஒரு வன்முறையாளன். ஆனால் நமக்கு பகத்சிங் ஒரு மாவீரன், தியாகி, விடுதலைப் போராளி. இதற்குக் காரணம் வரலாறு குறித்த நமது கண்ணோட்டமும் அதன் சார்புத் தன்மையும் தானே தவிர வரலாறு அல்ல. வரலாறு எப்போதுமே வரலாறுதான். பகத்சிங் எப்போதும் தியாகி தான். மாறுவதெல்லாம் அதை அணுகுபவர்களின் சார்புத்தன்மைதான்.

எதன் சார்பில் நாம் நமது கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதன் சார்பிலேயே நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். எத்தகைய சார்பும் இல்லாமல், எதையும் புரிந்து கொள்ள முடியாது. நடுநிலை என்பது பொய்யானது. வரலாறு குறித்த நமது கண்ணோட்டம் எதுவாக இருக்க முடியும்?. இயக்குநரின் கண்ணோட்டம் எது?.

வரலாற்றின் தத்துவம் உண்மை, என்பதுதான் இயக்குநரின் கண்ணோட்டம். இன்று, விடுதலைப் போராட்ட வரலாறு என எழுதி வைக்கப்பட்டிருக்கிற கருத்துக்களில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறானவை; இன்று புகழ்மாலை சூட்டப்பட்டிருக்கிற பலர் அதற்குத் தகுதியில்லாத செயல்களையும் செய்துள்ளார்கள். இன்று நிலவுகிற உருவாக்கப்பட்ட மதிப்பீடுகள் பலவும் பொய்யாகவும் உள்ளன. மறைக்கப்பட்டுள்ள விசயங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை வெளிக் கொணர வேண்டியதையே அதாவது, உண்மையை வெளிக்காட்ட வேண்டுமென்பதே, இந்த ஆவணப்பட முயற்சியின் நோக்கமாக இருக்கிறது, என்பதை எழுத்துருக்களாக ஒவ்வொரு பகுதிகளிலும் வருகின்ற வாசகங்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையைக் கண்டறியவேண்டும் என்கிற நோக்கமானது வரலாற்றின் தத்துவமே உண்மைதான் என இயக்குநரைக் கூற வைத்துவிடுகிறது. ஆனால், இது உண்மையல்ல. காரணம் வரலாற்றின் தத்துவம் உண்மை என்பது அல்ல; வரலாற்றின் தத்துவம் போராட்டம் தான். ஏடறிந்த வரலாறெல்லாம், வர்க்கப்போராட்டங்களின் வரலாறே, என்கிறார் பேராசான் கார்ல்மார்க்ஸ். ஒருவேளை படம் கூறுவது போல், வரலாற்றின் தத்துவம் உண்மை எனக்கொண்டால் அந்த உண்மை என்பது வர்க்கப்போராட்டம் தான். இதை இனிமேல்தான் நிரூபணம் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை, ஏற்கனவே போதுமான ஆய்வுகள் வந்துள்ளன.

காலம் என்பது மூன்று பாகங்களைக் கொண்டது. இறந்தகாலம், நிகழ்காலம்,எதிர்காலம் என்கிற இம்மூன்றும் ஒன்றின் மூன்று பாகங்கள்தான். இவற்றைத் தனித்தனியாக வெட்டி எடுத்துப் பேசுவது, முழுமையற்ற தன்மைகொண்டதே. இறந்தகாலத்தை ஆய்வு செய்தாலும் கூட அதில் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்துப் பார்க்கும் போதே அந்த ஆய்வு நிறைவு பெறும். பிறபாகங்களூக்கும் இது பொருந்தும்.

காலம் என்பதில் மூன்று பாகங்கள் இருக்கின்றன. ஆனால், உண்மை என்பதில் மூன்று பாகங்கள் இல்லை. உண்மை என்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும். பலவிதமான உண்மைகள் இருக்கமுடியும் என்கிற அகிராகுரோசேவாவின் ரசோமான் தத்துவம் ஒரு அபத்தவாதமே!. இதை எப்படி விளங்கிக் கொள்வது?.

வெள்ளையர்களுக்கு மருதிருவர்கள் பயங்கரவாதிகள்தான், தேசத் துரோகிகள்தான். இது வெள்ளையர்களுக்கான உண்மை. ஆனால் நமக்கு மருதிருவர்கள், போராளிகள், நாட்டுப்பற்றாளர்கள். இது நமக்கான உண்மை. ஆக இரண்டு உண்மைகள் இருக்கின்றன. இது உண்மையா?. இரண்டு உண்மைகள் இருக்கமுடியுமா? இங்கு இரண்டு உண்மைகள் இருக்கிறதா? இல்லை.

மருதுபாண்டியர்கள் விடுதலை வீரர்கள் என்பதுதான் ஒரே உண்மை. எப்படி? நம்மவர்கள் என்பதால் அல்லது நமது மண்ணிற்காகப் போராடியவர்கள் என்பதால் அவர்கள் விடுதலை வீரர்கள் எனும் மதிப்பீட்டிற்கு வரவில்லை, மாறாக, ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான கிழக்கிந்தியக் கம்பெனியின் அநீதியை எதிர்த்தவர்கள் என்பதாலும் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியமே பயங்கரவாதியாகவும், காலனிய நாடுகளின் தேசத்துரோகியாகவும் இருப்பதால், மற்றவர்களைச் சொல்லும் தகுதி இழந்த அயோக்கியர்களின் பொய் என்பதாலும் தான் நாம் மருதிருவரை விடுதலை வீரர்கள் என்கிற ஒரே உண்மைதான் உண்டு என்கிறோம்.

இந்த உண்மை ஒரு எளிய உண்மை. இதுதான் வரலாற்றின் தத்துவம் என ஒன்று இருக்குமேயானால் அந்தத் தத்துவம் சொல்லும் உண்மை.

1805 வரை அந்த உண்மையை வெகுவாக நெருங்கி வருகிற படம், அதன் பின் வெகுவாக விலகிப் போய்விடுகிறது. இதற்கு ஏராளமான உதாரணங்களை படத்தில் காட்டமுடியும். ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.

குறிப்பாக, காந்தியையும் நேதாஜியையும் படம் அணுகும் முறையினைச் சொல்லலாம். இருவரையுமே படம் சாதகமானதாக அணுகுகிறது. இருவரின் மீதான அணுகுமுறைக்கான சார்பு எதுவென்றே புரியவில்லை அல்லது வெறும் புகழ்ச்சி என்பதாக மட்டுமே இருக்கிறது.

நேதாஜியின் மீதான அணுகுமுறையைக்கூட அபிமானம் என யூகிக்க முடிகிறது. ஆனால் காந்தி குறித்த அணுகுமுறை ஏராளமான கோளாறுகளைக் கொண்டிருக்கிறது.

காந்தியை உரசிப்பார்க்க பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இருப்பினும் முழுவதுமாக நமக்கு உதவக்கூடிய ஒரு உரைகல், பகத்சிங். ஆனால், படத்தில் பகத்சிங் குறித்த பதிவுகளில்லை. பகத்சிங் பற்றிப் பேசாமல் இந்திய வரலாறா?.

பகத்சிங் குறித்துப் பேசாமலிருப்பது காந்தியின் முகத்திரையைக் காப்பாற்றத்தானோ எனும் அளவிற்கு காந்தி குறித்த புகழ்ச்சியான பார்வை இருக்கிறது. பகத்சிங் குறித்த பதிவுகள் (அவரது புகைப்படம் இருந்தாலும் கூட) இல்லாதது, இம்மொத்த ஆவணத்தொடரையுமே அர்த்தமிழக்கச்செய்யும் வகையில் அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் தவறான தகவல்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் விளக்க இங்கு இடமில்லை.ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லலாம்.

ஒன்றுபட்ட இந்தியாவிற்கு ஜின்னாதான் பிரதமர் என்கிற காந்தியின் திட்டத்தை எற்க மறுத்தது ஜின்னா அல்ல, நேருவும், படேலும் தான். ஆனால், படம் ஜின்னாவைக் குற்றவாளியாக்குகிறது.

1922 ல் துவக்கப்பட்ட இந்துமகாசபையின் தலைவர் பாய்பரமானந்தா தான் பாகிஸ்தானை முதலில் அறிவித்தார். 1937 ல் சாவர்க்கர், இந்தியா ஒரே தேசமல்ல இரண்டு தேசங்கள், எனச்சொன்னார். 1936 ல் அகில இந்திய முஸ்ஸீம் லீக் கட்சி கூட கூட்டாட்சி தான் கோரியதே தவிர, பிரிவினை அல்ல. 1933 லண்டன் வால்டோரிப் ஓட்டலில் தனக்கு விருந்து வைத்துப் பேசிய ரஸ்மத் அலி எனும் மாணவர் பாகிஸ்தான் பிரிவினையை வற்புறுத்தியபோது, உடனடியாக நிராகரித்துப் பேசினார் ஜின்னா. அதன் பிறகு 1937 உ.பி தேர்தலில் கூட்டணிக்கு வந்த முஸ்லீம்லீக்கை, கட்சியையே கலைத்துவிடவேண்டுமென்று நிபந்தனை வைத்து நெருக்கடிக்குள் தள்ளினார் நேரு. இவ்வளவிற்கும் பிறகுதான் 1940 லாகூர் மாநாட்டில் லீக்கானது தனிநாடு கோரிக்கையை முன்வைத்தது.

இதுபோன்று படம் விளக்கிக் கூறுகிற பல கருத்துக்கள் விவாதத்திற்குரியவை. அடிப்படையில் இந்திய வரலாற்றைப் படம் அணுகுகிற முறையில் சில உடன்பாடுகளும், ஏராளமான முரண்பாடுகளும் இருக்கின்றன.

இந்திய மக்களின் விருந்தோம்பல் பண்பினால் வணிகம் செய்ய வந்த அய்ரோப்பியர்கள் இங்கே தங்கினர்........ எனப் படம் துவங்குகிறது. இது பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இங்கிலாந்து ராணி பிரிட்டிஸ் முதலாளிகளிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தன்னுடைய ராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறினார். ராணுவவீரர்கள், ஆயுதங்களோடு பிரிட்டிஸ்வணிகர்கள் கப்பல்களில் கிளம்பினார்கள். மூலதனத்தின் விரிவாக்கம்தான் இது. உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்கே ஆண்டுகொண்டிருந்த நிலப்பிரபுத்துவ அதிகாரக்குழுவினரில் சரசமம் செய்துகொண்டோருக்கு மரியாதையும் எதிர்த்துநின்று சமர் புரிந்தோர்க்கு அழிவையும் கொடுத்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர்.

இந்தியத் துணைக்கண்டத்திலும் கூட இதுதான் நடந்தது. முதலில் வந்தார்கள்; தனித்தனியான பாளையங்களை ஒடுக்கி ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள்; மாவீரன் திப்புவின் மரணத்தின் பின் நடந்த 1857 எழுச்சியையும் அடக்கி வென்றார்கள். பிறகு இந்தியா எனும் நாட்டினை உருவாக்கி, இந்தியத் துணைக்கண்டத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக நிலப்பிரபுத்துவத்துடன் கடுமையாகப் போராட பிரிட்டிஸ் முதலாளித்துவத்திற்கு சுமார் 200 ஆண்டுகள் பிடித்தன.

இடையில் 1917 ல் நடைபெற்ற ரஸ்யப்புரட்சி உலகமுதலாளிகளுக்கு பெரும் படிப்பினையைத் தந்தது. எனவே நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தாமல் அதனோடு சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு அது வந்தது, அந்தச் சமரசம் தான் 1947 ஆகஸ்டு 15.

முதலாளித்துவம் தனக்கு தேவையான ஒரு கல்வி முறையை இங்கே நடைமுறைப் படுத்தியது. அதன் மூலம் இங்கே புதிய இந்திய முதலாளிகள் உருவானார்கள். அவர்களின் தேவைகளுக்கான கோரிக்கையாக சுயாட்சிக் கோரிக்கை உருவானது. ஜமீந்தார்களுக்கும் அவர்களிலிருந்தே உருவான புதிய முதலாளிகளுக்குமிடையில் ஏற்பட்ட தகராறுகளினால் சுயாட்சி கோரிக்கை ஒருங்கிணைய முடியவில்லை. இந்தியத் துணைக்கண்டம் முழவதும் இருந்த இந்தத் தகராறுகளைத் தீர்க்க வந்த பொருத்தமான தரகர்தான் மோகந்தாஸ் கரம்சந்காந்தி. இந்திய நிலப்பிரபுக்களுக்கும்,பிரிட்டிஸ் அரசால் அடிவருடிகளாக உருவாக்கப்பட்ட சர் பட்ட முதலாளிகளுக்கும் அறிவுரையாளனாகவும், பிரிட்டிஸாரின் நண்பனாகவும் வளர்ந்தவர்தான் காந்தி.

ஒருபுறம் இட்லரின் அட்டகாசத்தால், உள்ளதும் போய்விடும் என்கிற நிலை; ஒடுக்க ஒடுக்க வளரும் உள்நாட்டுமக்களின் போராட்டம்; காந்தியைக் கொண்டு எவ்வளவுதான் தடுத்துநிறுத்தினாலும் மீறிக்கொண்டு வளரும் நிலை; சுரண்டலை அப்படியே வைத்துக்கொண்டு அதிகாரத்தை மட்டும் இந்தியர்களிடம் மாற்றிக்கொடுத்தது பிரிட்டிஸ் அரசு.

இன்னொருபுறம் இட்லரை வீழ்த்திய சோவியத்ரஸ்யாவைக் கண்டு மிரண்டன் ஏகாதிபத்தியங்கள், தங்களது முதலாளித்துவ அதிகாரத்திற்காக நிலப்பிரபுத்துவத்தை முழுவதுமாக வீழ்த்தினால் கம்யூனிஸ்டுகளால் புரட்சி செய்யப்பட்டு தாங்கள் வீழ்த்தப்படும் வாய்ப்பு ஏற்படுவதை அறிந்து, நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டன. அந்த சமரசம் இன்றும் தொடர்வதுதான் நிகழ்கால வரலாறு.

சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலம் கூட, இதுதான் இந்திய வரலாறு குறித்த சரியான கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்வதுதான் வரலாறு.

பூலித்தேவனும், வேலுநாச்சியும், மருதிருவரும், கட்டபொம்மனும், ஊமத்துரையும், கோபால்நாயக்கரும், சுந்தரலிங்கமும், தீரன்சின்னமலையும், ஹைதரலியும், திப்புசுல்தானும், பகத்சிங்கும், வ.உ.சி யும் நாயகர்களாக, தியாகிகளாக, போராளிகளாக இந்த வரலாற்றில் தான் இடம் பெறுகிறார்கள்.

அதேசமயம், எட்டபொம்மு நாயக்கர், புதுக்கோட்டைத்தொண்டைமான் துவங்கி கட்டபொம்மனைப் பாடாத; எட்டப்பன்பரம்பரை மன்னனிடம் வேலை பார்த்த கவிஞர் பாரதி ஊடாக, இன்றைய மன்மோகன்சிங், ப.சிதம்பரம் வரை துரோகிகளாகவும் இதே வரலாற்றில் தான் இடம் பெறுகிறார்கள்.

இந்த துரோகப் பட்டியலில் இடம் பெறும் சிலரையும் கூட படம் கதாநாயகர்களாகவே காண்பிக்கிறது. வேலூர்ப்புரட்சி வரை சரியாக இருக்கிற வரலாற்றுக் கண்ணோட்டத்தின் சார்புத்தன்மையானது அதன் பிறகு வருகிற கட்டங்களில் தடுமாற்றம் கொண்டு தவறானதாகவும் மாறிவிடுகிறது.

ஒரு ஆவணப்பட இயக்குனராக, தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிற இயக்குநர், தனது சார்புத்தன்மையை உணர்ந்து கொண்டு சமரசம் செய்து கொள்ளாமல் வரலாற்றைப் பின் தொடரவேண்டும்.அவ்வாறு பின் தொடரும் போது, இந்தக் காலத்தையும் அவர் திருத்துவார், திருத்தவும் வேண்டும். அப்போதுதான், காலனியாதிக்கம் என்கிற இறந்த காலத்தையும், மறுகாலனியாதிக்கம் என்கிற நிகழ்காலத்தையும், புரட்சி என்கிற எதிர்காலத்தையும் புரிந்துகொள்வதோடு, வரலாற்றின் தத்துவத்தையும், காலத்தின் தத்துவத்தையும், ஏன் உண்மையின் தத்துவத்தையும் கூட இப்படத்தின் பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள். வாழ்த்துக்கள்!.

டுபாக்கூர் கவிதைகள்

Align Centerநகுலன்பூனை ஹவி

1

கவிதையைப் படித்து முடித்ததும்

பக்கத்தில் வந்து நின்றது பூனை

என்ன படித்தாய்

பூனையைப் பற்றிப் படித்தேன்

பூனையைப் பற்றி என்ன படித்தாய்

பூனையா நிழலா

நிழலா பூனையா

எதுதான் கடைசி

பூனை பூனைதானா என்பது

பிராந்திக்கு மேலே மிதக்கும் பூனைப்பீ

இனி கண்ட இடத்தில் போகாதே

சொல்லி வைத்தால் அள்ளிப் போக

ஆட்கள் இருக்கிறார்கள் ஏராளம்

யாரு ராமச்சந்திரனா

ஆமாம் அதே ராமச்சந்திரந்தான்.

/////////////////////////////////


2

பூனை எலியைக் கவ்வும்

சரி!

கவ்வுமா? கெளவுமா?

ம்! ஒழுங்காச்சொல்லு!

பூனை எலியைக் கவ்வும்

அப்புறம்?

எலி பூனையைக் கவ்வாது

சரி!

கவ்வவே கவ்வாது

சரி!

கெளவவே கெளவாது

சரி!சரி!

பூனை எலியைத் தின்னும்

சரி!

எலி பூனையைத் தின்னாது

சரி!

எலி கருவாட்டைத் தின்னும்

சரி!

ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹாஹா

பூனையும் கருவாட்டைத் தின்னும். நீ!

நீ தின்ன மாட்டாய்!

சரி விஷயத்திற்கு வா!

ம்!

பூனை எலியைக் கவ்வுமா?

உஸ்!

நா கரெக்டாச் சொல்றேன்

ம்!

பூனை எலியைக் ஹவ்வும்.

///////////////////////////

3

சொரனையற்ற இதுபோன்ற

பெரும்பாலான நேரங்களில்

பூனை எதிரே வந்து விடுகிறது

அவனால் தாங்க முடியவில்லை

பூனை கோபக்காரப் பூனை

பூனையை முடித்துவிட்டாயா

இனிப் புன்னாக்கை எழுது

பூனாவையும் பூவன்னாவையும்

தவிர வேறென்ன தெரியும்

நான் சிந்தனாவாதி என்கிறான்

கையில் டம்மி பிஸ்டல்

வழியத் தயாராயிருக்கும் ரத்தம்

பிளாஸ்டிக் டப்பாக்களை

மோந்து பார்க்கிறது பூனை

ரத்த வாசனை சூப்பர்

பூனை தின்கிற சோறெல்லாம்

இவன் வீட்டுச்சோறே

எவ்வித் தாவியதில்

பெரிய பெயிண்ட் டப்பாவில்

விழுந்து மூழ்கியது பூனை

அய்யோ

ரத்தம் வழியவழிய

டப்பாக்குள்ளிருந்து எழுந்தான் இவன்.

/////////////////////////////////////

Tuesday, November 10, 2009

உன்னைப் போல் ஒருவன் :விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் - ஆர்.எஸ்.எஸ்ஸைப் போல் பி.ஜே.பி



A wedness day எனும் இந்திப்படம் ஒரு R.S.S காரனோட படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைத் தமிழில் கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார் என்றால் படம் எப்படி இருக்கும்? படம் பார்த்தவர்கள் என்ன சொல்லக்கூடும்?

அன்பே சிவம் கோஷ்டிகள் :-
மிகவும் முற்போக்கான படம் என்று சொல்லக்கூடும். (ஏன் ஒரு கம்யுனிஸ்டா இருக்கக்கூடாதுன்னு அறிவு ஜீவித்தனமாக கமல் சொல்லுறது நம்மளத்தான் தோழர்)
என்னயிருந்தாலும் நம்மவாள் கோஷ்டிகள்:-
தசாவதாரத்திற்குப் பிறகு இரசிகர்களாகி இருக்கும் இவர்கள் உள்ளுக்குள் பஜனைபாடலாம். (என்ன, நாசூக்கா அடிச்சிருக்கார். பாருங்கோ)
தொழில்நுட்ப இரசிகர்கள்:-
A wedness day யுடன் ஒப்பிட்டு F2வை நினைத்து ஸ்ருதிஹாசனையும் எதிர்பார்த்து ஒருவேளை உதட்டைப்பிதுக்கலாம். (wedness day டெம்போ இதுல இல்லையே).
அம்பேசிவம் ஆரியக்கோஷ்டிகள் :-
தமிழ்லயும் நமக்கு ஆள் இருப்பதற்காக உள்ளுக்குள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். (ராஜ்கமல் கம்பெனி சின்னமே தாமரைதான், புரிஞ்சுக்கிங்க)
விசிலடிக்கும் கோஷ்டிகள் :-
பார்த்தவரை, விளங்கியும், விளங்காமலும் இருக்க, விசிலடிக்க வேண்டிய இடத்தில் (தனக்கு ஓட்டு இல்லாமல் செய்துவிட்டதை கமல் சொல்லும் இடம்) விசிலடித்து விட்டு மட்டும் வர வேண்டியதை எண்ணி நொந்து கொள்ளக்கூடும். (அந்த சிகிரெட் பிடிக்கிற பொண்ணு, அதான் தமிழ் டி.வி ரிப்போர்ட்டர் நடேஷா கூட ஒரு டூயட் வச்சிருக்கலாம்).

என்னைப்போல் ஒருவனைப்பற்றி நாம் சொல்ல என்ன இருக்கிறது?
ஒரு போலீஸ்கமிஷனர். பெயர் மாறர்-மலையாளி- தான் ஒரு மனிதனைச் சந்தித்தாகவும், அவனது செயல்பாடுகள் தனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அதனால் வேலையை விட்டு விலகி விட்டதாகவும், கடற்கரையில் தனது நாயோடு நின்று கொண்டு தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். படம் தொடங்குகிறது. சிறையிலிருக்கிற இஸ்லாமிய பயங்கரவாதிகள் மூன்று பேரையும் ஆயுத வியாபாரியான ஒரு இந்துவையும் விடுவிக்கக் கோரி அவ்வாறு விடுவிக்காவிட்டால் சென்னையின் முக்கிய இடங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கும் என அரசை மிரட்டியதால் விடுவிக்கப்பட்ட கைதிகளைக் கொல்கிறார். அவர்களை விடுவிக்கச் சொன்ன கமல். கமல் எனக்குறிப்பிடக் காரணம் படத்தில் இவர் கதாபாத்திரத்திற்குப் பெயர் இல்லை.
ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறுகிற கதை இது. திரைக்கதை உத்தி, காட்சி அமைப்பு, வசனம், மாசாலாத்தனமில்லாதது, இவை அனைத்திற்கும் மேலாக படம் சொல்லும் கருத்து, இவைகளுக்காகத் தமிழ் பத்திரிக்கைகளால் உன்னைப் போல் ஒருவன் பாராட்டப்படலாம். கலைஞர் டிவியில் தொடர் விளம்பரங்களும், பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன.
மற்றவைகளை விட்டுவிடலாம். A Wednesday யையும் விட்டுவிடலாம். நாமே நேரடியாக உன்னைப் போல் ஒருவன் என்கிற இருவரையும் சந்திக்கலாம். ஆனால் இருவரும் ஒருவரே.
நீ யார்? உன் பெயர் என்ன? எனப் போலீஸ் கேட்கிறது. நான் ஒரு பொது மனிதன் comman man எனப் பதில் சொல்கிறார் கமல். இந்தியில், நான் யார் எனச் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அதற்கொரு சாயம் பூசிவிடுவீர்கள். அதனால் தவிர்க்கிறேன் என்பார் நஸ்ரூதீன்ஷா. ஷாவின் கூற்றில் தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து என்பதை மறைப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் கமல் சொல்லுகிற கூற்று, நீ இந்துவா, முஸ்லீமா சொல் எனக்கேட்கப்படும்போது நான் ஏன் பவுத்தனாக இருக்கக்கூடாதா?, கம்யுனிஸ்டாக இருக்கக்கூடாதா?, நாத்திகனாக இருக்கக்கூடாதா?, என எதிர்க்கேள்வி கேட்டு மடக்கிறார் கமல். (அட! யோக்கிய சிகாமணி! நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போ. ஆனால் அதை ஏன் சொல்லமாட்டேங்கிற). ஆனாலும் கூட தன்னை ஒரு இந்து என்றோ, முஸ்லிம் என்றோ அடையாளம் காணமுடியாதபடி மர்மமாக்கிக் கொள்கிறார் கமல்.
போனில் பேசும் மனைவி இன்ஷாஅல்லா என்கிறார். படத்தின் இடைவேளையில் முன்புறமாய் கைகளை கைகட்டிக் கொண்டு தலைகுனிந்து நிற்க பின்னனியில் அல்லா பாடல் ஒலிக்கிறது. அப்படியானால் கமல் முஸ்லீமா?
கமல் ஒரு முஸ்லீம் என்றால் இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளையும் பிரித்துக் காட்டிவிட்டதாக ஆகிவிடும். அந்தக் கதாபாத்திரத்தின் அளவிற்கு அது நியாயமானதாகக்கூட இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் படம் இஸ்லாமியர்களிடையே பெரும் வரவேற்பையும் பெறும். ரம்ஜானிற்கு முதல்நாள் வெளிவந்த படம் என்பதால் படத்தின் வசூலுக்கும் உத்திரவாதம் இருக்கும். இது கமல் என்கிற தயாரிப்பாளரின் கணக்காக இருக்கலாம். ஆனால் கமல் உண்மையில் இந்துதான். போனில் பேசும் மனைவி இன்ஷாஅல்லாவா என்கிறாள். இவர் ஆமாம் என்கிறார். இது இஸ்லாமியர்கள் பேசிக்கொள்ளும் முறையல்ல. ஆனாலும் கூட இப்படியொரு இஸ்லாமியச் சாயத்தைப் பட்டும்படாமலும்பூசி ஏமாற்றுகிறார்.
அடுத்து இவர் இதைச் செய்யத்துண்டிய காரணமான கதை, (அது சின்னக்கதைதான்) மகளா (தனது மகளா, பிறரது மகளா என்பது பார்வையாளர் இரைச்சலில் விளங்கவில்லை, கேட்டவர்கள் எல்லோரும் தெரியவில்லை என்றே சொன்னார்கள்). 40, 50 பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சூழ்ந்திருக்க, அவளது பிறப்புறுப்பில் கையை நுழைத்து அவள் சுமந்த கருவை வெளியில் எடுத்துப்போட்டனர் என்பதை கமல்பஞ்ச்சில் சொல்லுகிறார். அப்போது எந்த ராதாகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும், லால்கிருஷ்ணனும் வந்து காப்பாற்றவில்லை என்கிறார். இந்த வசனம் இந்து கடவுளை விமர்சனம் செய்வதால் இவர் முஸ்லீம் என்றுதான் தெரிகிறது எனச்சிலர் சொல்கிறார்கள். ஒருவன் வேதனைக்குள்ளாகி விழும்போது தனது கடவுளைத்தான் நொந்துகொள்வானே தவிர பிற மதக் கடவுளை அல்ல. இயேசு கிறிஸ்துகூட என்னை ஏன் கைவிட்டீர் ஆண்டவரே என்று தான் கேட்டார். காப்பாற்ற கிருஷ்ணன் வரவில்லையென்றால் என்ன அர்த்தம்? துன்பப்படுவது பாஞ்சாலி என்பதுதானே!.
கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்ததை நினைத்துக் கோபமும், வேதனையும் கொள்கிறார் கமல். வடமாநிலங்களில் மதக்கலவரம் பற்றி எரிந்தபோது அதைக்குறித்து தமிழர்கள் கவலைப்படவில்லை என்கிறார் கமல் சரிதான், பொதுப்புத்தி அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜராத்திலும், கோவையிலும், மும்பையிலும் ஒருசிலபேராவது தங்களால் முடிந்த அளவு தாக்குதலுக்குள்ளான குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆஸ்கார்நாயகன் (இல்லை, இல்லை இந்த பட்டம் இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் போய்விட்டது. உலகநாயகன்). குஜராத் படுகொலையின் போது என்ன படம் எடுத்து விட்டார்?. பஞ்சதந்திரமும், பம்மல்.கே.சம்பந்தமும்தானே? ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது 2001ல் புகழேந்தி காற்றுக்கென்னவேலி எடுத்தார். 2002ல் மணிரத்தினம் கூட கன்னத்தில் முத்தமிட்டால் எடுத்தார். ஆனால் கமல் என்ன செய்தார் தெரியுமா? இஞ்சாருக்கோ, இஞ்சாருக்கோ என தெனாலியில் ஜோதிகாவை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல ஈழத்தமிழனை ஒரு பயந்தாங்கொள்ளியாகவும, மனோ நோயாளியாகவும் சித்தரித்து இழிவுபடுத்தியிருந்தார்.
இவ்வளவு வேதனைப்படும் கமல், இதற்குப் பழிவாங்குவதற்காக அல்லாமல் பயங்கரவாதிகளைப் பயமுறுத்துவதற்காக இந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார். அதாவது தீவிரவாதிகளைக் கொல்லும் தீவிரவாதியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார் இது ஒரு சாமானிய, பொதுவான, சராசரி மனிதனின் கோபம் என்கிறார். ஆனால் இதற்கு அவர் பழிவாங்கத் தேர்ந்தெடுத்திருப்பது இஸ்லாமியர்களை. நமக்கு கேள்வியும் அங்கேதான் வருகிறது. ஆனாலும் ஒரு இந்துவை அதில் சேர்த்ததிற்கு காரணம் தான் இந்து என்பதை மறைத்துக் கொள்ளத்தான். அதைச் சொல்லியும் காண்பிக்கிறார் இருப்பினும் அவனை வெறும் ஆயுதவியாபாரியாக மட்டும் ஏன் காண்பிக்கிறார்? அதுவும் அவன் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விற்பவன் எப்படி? இந்துத்தீவிரவாதிகள் கிடைக்காததால்தானா அந்தச் சராசரிமனிதன் இப்படிச் செய்கிறான்? இல்லை இந்துக்களில் பயங்கரவாதிகள் இல்லை என்பதால் தான் இப்படிச் செய்கிறாரா? இந்துக்களில் ஏது பயங்கரவாதிகள்? பிற மதங்களில்தான் தீவிரவாதிங்களும், பயங்கரவாதிகளும் இருப்பார்கள். திணமனி தமிழ்நாட்டில் தமிழ்த்தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என எழுதியது. ஆனால் ஒருபோதும் இந்துத் தீவிரவாதிகள் இருப்பதாக எந்தபத்திரிக்கையும் எழுதியதுஇல்லை. ஆனால் கமலுக்கும் ஒரு இந்துத் தீவிரவாதிகூட தெரியவில்லையே ஏன்? கமல் பொதுவான சராசரி மனிதனாக இருந்திருந்தால் அவர் எந்த நால்வரைக் கொண்டுவந்திருக்க வேண்டும் தெரியுமா? 1. அத்வானி 2. பால்தாக்கரே 3. ராமகோபாலன் 4. நரேந்திரமோடி
சரி, கருவறுத்த கொலை உண்மையில் எங்கு நடந்தது? குஜராத்தில் நடந்தது. ஒரு இஸ்லாமியப் பெண்ணை நிறைமாத கர்ப்பிணி உயிரோடு இருக்கையிலே வயிற்றைக் கிழித்து திரிசூலத்தால் அந்தக் குழந்தையை குத்தி எடுத்து அவள் கண்முன்னால் நீட்டிக் காண்பித்து அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் வாட்டினார்கள் இதை நேராக கண்ட பெண்கள் தஞ்சையில் ம.க.இ.கவின் தமிழ் மக்கள் இசைவிழாவில் நேரடியாகச் சொன்னபோது ஏற்பட்ட துயரத்தை வார்த்தைகளால் உணர்த்தமுடியாது. அது ரத்தச்சாட்சியங்கள் என்று குறுந்தகடாகவும் கிடைக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய கொடூரத்தை இஸ்லாமியர்கள் செய்தார்கள் அதுவும் வடக்கே ஒரு ஊரில் என்று புளுகுகிறார் கமல். முதலமைச்சராக கருணாநிதியையே காட்டமுடிந்த, முதலமைச்சரின் வீடாக கோபாலபுரம்வீட்டையே காட்டமுடிந்த கமலால், இதை ஏன் தைரியமாகச் சொல்லமுடியவில்லை. இது பயமா? அல்லது ரத்தபாசமா?
பயங்காரவாதத்தைப் பேசும் ஒருவனால் அத்வானியையும், நரேந்திர மோடியையும் தவிர்த்து விட்டுப் பேச முடியுமா? அப்படி ஒருவன் பேசினால் அது உண்மையானதாக இருக்குமா?

பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் ஒரு சராசரிமனிதனின் கருத்து என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பயங்கரவாதம் ஏன் உருவெடுக்கிறது? அதை யார் உருவெடுக்க வைக்கிறார்கள் என்பதில் சராசரிமனிதனின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. மிகப் பெரும்பாலான நேரங்களில் இம்மாற்றுக்கருத்துக்களே உண்மையானதாக இருக்கிறது. பலர் கமலைப போல இருக்கலாம். அதனால் அதுவே உண்மையாகி விடாது. சர்வதேச அளவில் இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவெடுத்து ஊட்டம் பெற்று பரவுவதற்குக்காரணம் அமெரிக்காதான் (உதாரணம் பின்லேடன்).
இந்தியாவிலும்கூட இஸ்லாமிய பயங்கரவாத்தை வளர்க்கத்துடித்துக் கொண்டிருப்பது இந்துத்துவக் கும்பல்தான். தென்காசியிலும், வாரணாசியிலும், பிடிபட்டகதை உலகறிந்தது. கோவையில் குண்டுவைத்ததாக கைதுசெய்யப்பட்ட ஒரு இஸ்லாமியரும் கமல் பட்டியலிடும் டாப்மோஸ்ட் பயங்கரவாதிகளுள் அடக்கம். ஆனால் கோவை குண்டுவெடிப்பிற்கு முன் நடந்த கொடூரமான வன்முறை வெறியாட்டம் யாரால் நடத்தப்பட்டது? அதை நடத்திய கும்பலின் வணிக நோக்கம் என்ன? கைக்குழந்தைக்குத் தெரியும் இந்த உண்மைகள் கூட உலகநாயகனுக்குத் தெரியாமல் போய்விட்டதா! கமல்ஜி! இது என்ன உங்கள் சினிமாவா? அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் டாக்குமென்டரியா?
சராசரி மனிதன் தவறு செய்யக்கூடாதா? அப்படித்தான் கமலும் என யாரும் பொய் சொல்ல முடியாது. நாட்டில் நடைபெறும் பயங்கரவாதச் செயலைக்கண்டு கோபப்படும் ஒரு சராசரி மனிதன். இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, தினமணி, தினமலர் படிக்கும் சராசரி மனிதன் கமல் வேண்டுமானால் பயங்கரவாதத்தின் பின்னனி தெரியாமல் இருக்கலாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளரான உலகநாயகன் கமலுக்குத் தெரியாமல் இருக்குமா? தயாரிப்பாளர் கமல் சராசரி மனிதனாக தினமலர், தினத்தந்தி படிப்பவனை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஒரு கம்யுனிஸ்டைடோ, நாத்திகனையோ சராசரிமனிதனாகத் தேர்ந்தெடுத்திருக்கலாமே? அப்படித் தேர்ந்தெடுத்திருந்தால் தெரிந்திருக்கும் அவன் வைக்கும் முதல் குண்டு எந்த இடத்தில் இருக்கும் என்பது.
1984ல் இந்திராகாந்தி செத்த போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை யார் செய்தது? இந்து வெறியர்களா? காங்கிரசுக் குண்டர்களா? நானாவதி கமிஷன் சொன்னது என்ன? டர்பனும் தாடியும் வைத்திருந்தவரெல்லாம் தலைகள் துண்டாக்கப்பட்டு வீசப்பட்டனரே? அதே 1984ல் கமல் என்ன படம் நடித்தார் தெரியுமா? எனக்குள் ஒருவன். அப்போது என்னைப் போல் ஒருவன் எடுத்திருந்தால் கமல் யாருக்கு குண்டு வைப்பார், ஜகதீஸ் டைட்லருக்கா? ராஜீவ் காந்திக்கா?

பெரும்பாலான மக்கள் நலன் சாராத புதிய கல்விக் கொள்கை மூலம் கற்றலை, கற்பித்தலைக் கடைச்சரக்காக்கி அமோக விலைக்கு விற்பனை செய்து, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை தற்குறிகளாகவே இன்னும் நீட்டித்து வைத்திருக்கும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியாளர்கள் பயங்கரவாதிகளில்லையா?
உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டைக்காக கைத்தறியையும், விசைத்தறியையும் காவுகொடுத்து மானங்காக்க ஆடை வழங்கும் ஆயிரக்கணக்கான நெசவாளிகளின் தற்கொலைகளுக்கு காரணமான புதிய ஜவுளிக் கொள்கையைக் கொண்டுவந்தவர்கள் பயங்கரவாதிகளில்லையா?
பன்னாட்டு மருந்து தயாரிப்பு முதலாளிகளின் லாப வேட்டைக்காக, புதிதுபுதிதாக உற்பத்தி செய்யப்படும் நோய்க்கிருமிகளைப் பரிசோதனை செய்து பார்க்கும் எலிக்கூடமாக கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர்களைப் பயன்படுத்தும் கொடூரத்திற்கு காரணமான புதிய மருந்துக் கொள்கையை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகளில்லையா?
நிலத்தடி நீர்வளத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாரைவார்த்து விட்டு, குடிநீரைக் காசுகொடுத்து வாங்கும் அவலநிலைக்கு கோடிக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொண்டுவந்து நிறுத்தியவர்கள் பயங்கரவாதிகளில்லையா?
அவ்வளவு ஏன், மனிதச்சமூகம் உயிர்வாழ்வதற்கான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், கடந்த 10ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனரே! இவர்களுக்குக் குண்டு வைத்தது யார்? தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற சக்திவாய்ந்த நச்சுக் குண்டுகளை உழைக்கும் மக்களின் மீது வீசிய இந்திய ஆட்சியாளர்களெல்லாம் பயங்கரவாதிகளில்லையா?
இவ்வளவு அவலங்களும், துயரங்களுமுள்ள இந்த நாட்டில், இந்த அவலங்களுக்கும், துயரங்களுக்கும் காரணமாயிருக்கிற கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டி, அம்பலப்படுத்தி, அவர்களை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வை ஊட்டாமல், மேலும், மேலும் மக்களைச் சீரழித்து, நுகர்வுக்கலாச்சாரத்தில் சிக்கவைத்து அபலைகளாகவே ஆக்கிவைத்திருக்கும் ஊடகங்களின் முதலாளிகளும், அதன் எடுபிடிகளும் பயங்கரவாதிகளில்லையா? (தமிழ் சினிமாவையும் சேர்த்துதான் கமல்ஜி!)
குஜராத் கலவரத்தின்போது அரசும் இந்து வெறியர்களும் உன்னைப்போல் ஒருவனாக இணைந்து நின்றார்கள். ஆயுதம் நிரப்பப்பட்ட தார் ட்ரம்கள் வேனில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. போலீசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.காந்தியின் சபர்மதி ஆசிரமம் பூட்டிப் போட்டுவிட்டு ஓடிவிட்டது. “3 நாள் அவகாசம் தருகிறேன், அதற்குள் முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சட்டம் தன் கடமையைச் செய்யும்” என உத்திரவிட்டான் நரேந்திர மோடி. தெகல்கா.காம் பார்த்திருப்பீர்கள் அல்லவா? குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இனிமேலும் கைது செய்யப்படமாட்டார்கள். ஆனால் இந்த பொதுப்புத்தியில் சிலாகிக்கும் சக மனிதனிடம், பொலீசிடம், நீதிமன்றத்திடம், அரசிடம் நீதி கிடைப்பதணற்கான ஒரு நாதியும் இல்லாதபோது அவர்கள் என்னதான் செய்வார்கள்? இன்னும் சொல்லப்போனால் எல்லாவிதமான வழிகளையும் அடைத்துவிட்டு இசுலாமியர்களை பயங்கரவாத்திற்குள் தள்ளியதே இந்து பயங்கரவாதிகளும் அவர்களது அரசும்தான். சட்டக்கல்லூரி மாணவர்கள் திருப்பிப் போட்ட போட்டிற்கு மாணவர் அராஜகம், வன்முறை என்று முட்டாள்தனமாக புலம்பியதுபோல்தான் இசுலாமிய பயங்கரவாதமும் என்ற புலம்பலும்.
படத்தின் வடிவம் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. படத்தின் உள்ளடக்கத்தின்
மீது விமர்சனம் வைப்பவர்கூட வடிவத்தை சிலாகித்தே எழுதுகிறார்கள். இது ஆபத்தானது.
வெளிப்படையாகத் தன்னை அறிவித்துக் கொள்ளும் றா றநனேநளனயல -யைவிட
மறைத்துக் கொண்டு நடிக்கும் உன்னைப் போல் ஒருவன் ஆபத்தானது.
படம் எந்தக் கருத்தை பார்வையாளர்களிடம் பதியவைக்கிறது? “இசுலாமியர்கள் பயங்கரவாதிகள்”.
சிலாகிக்கப்படுகிற படத்தின் வடிவமானது இன்னும் இந்தக் கருத்தை ஆழமாக பதியவைக்கவே பயன்படுகிறது. அதாவது இசுலாமியர் எல்லோரும் பயங்கரவாதிகள் என்னும் கருத்தையே
ஆழமாக பதியவைக்கிறது. அப்படியானால் இந்த வடிவம் உள்ளடக்கத்தைவிட மிகவும் ஆபத்தானது.
உதாரமாக அவன் மிகச்சிறப்பாக, நேர்தியாக, அழகாக அந்த குழந்தையைக் கொலைசெய்தான் என்று
சிலாகிக்கமுடியுமா?
கமல் ஒரு பாசிஸ்ட் என குற்றம் சுமத்த முடியுமா? இல்லைதான். ஆனால் பாசிஸத்திற்கு
வக்காலத்து வாங்குகிற கேவலத்திற்கு அதைவிடவும் இழிவான பெயரைத்தான் சூட்டவேண்டும்.
பயங்கரவாதிகள் என்று நீங்கள் விளக்கம் கொடுப்பவர்களை விட இவர்கள் மிகக் கொடூரமான பயங்கரவாதிகளில்லையா?
இந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் பயங்கரவாதத்தை யார் கைக்கொள்ளுவது? நீங்கள் போவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் போலீஸ் கமிஷனர் உங்களை விட்டு விடலாம். பிறகு தனக்குள் உங்களையும் கண்டு கொண்டு மனசாட்சி உறுத்தி வேலையையும் விட்டுவிடலாம். ஆனால் இந்த கேடுகெட்ட பயங்கரவாதிகளை ஒழிக்கும் திருப்பணியில் இறங்குபவர்களை உங்கள் கமிஷனர் சும்மா விடமாட்டார்.
நீங்கள் போலீசைப் போல் ஒருவனாக இருக்கிறீர்கள்? ஆனால் மக்கள் அப்படி இருக்கமாட்டார்கள்! அவர்கள் உங்கள் இருவரையும் ஒன்றாகவைத்தே கேள்வி கேட்பார்கள். அதன்பிறகு உங்கள் இருவரையும் போல யாரும் இருக்க மாட்டார்கள். பொதுப்புத்தியை வருடிவிட்டு காசு பார்கும் ஒரு மோசடி வியாபாரிதான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதை இதைவிடவும் தெளிவாகக் கூறமுடியாது. இது மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டுமானால் விளங்காமல் போகலாம். காரணம் சரக்கு விற்பனைக் கொள்கை ஒன்றுதான். இவருக்கு பத்திரிக்கை, அவருக்கு சினிமா.

- குருசாமி மயில்வாகனன்
செப்டம்பர் 25, 2009

Saturday, October 31, 2009

மருதிருவர் குருபூசை : கட்டுரை

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.

அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.

24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.

  1. மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.
  2. ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன். உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் முதலில் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் 1801-லிருந்து துவங்குகள். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டும். காரணம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

அன்றைய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மருதிருவர்களின் தன்மானமும், வீரமும், நாட்டுப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. அடிமைத்தனத்தை மாற்றம் (Change) வளர்ச்சி (Development) என்று சொல்லி, மறைத்துப் பேசும் கோழைத்தனம் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் வடிவமைக்கப்படும் இந்நேரத்தில் மருதிருவர்களின் வீரம் நமக்கு ஒரு வழிகாட்டியாகும் தகுதியுள்ளதாக இருக்கிறது. நம்மை தன்மானம் உள்ளவர்களாக மாற்றக் கூடிய சக்தியுள்ளதாகவும் இருக்கிறது.

ஆனால் இதற்கும் மருதுபாண்டியர் குருபூசைக்கும் மயிரளவும் தொடர்பில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த குருபூசைக் கலாச்சாரம் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சாதி உணர்வை, சாதிவெறியாக மாற்றவும் பசும்பொன்னில் குருபூசை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்கான குரல் எழுப்புதலில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவை ஏந்தி ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை உணர்வைப் பிரதிபலித்து பரமக்குடியில் குருபூசை நடைபெறுகிறது. இவ்விரண்டும் சமப்படுத்த முடியாத குருபூஜைகள்தான்.

என்றாலும் மருதிருவர்களின் குருபூசை என்பது முழுக்க, ஓட்டுக்கட்சி அரசியலில் நுழைந்து பதவி சுகத்தை அனுபவிக்கவும் மக்கள் பணத்தைச் சுருட்டவும் முடியாமல் ஏங்கித்திரியும் சாதிய அமைப்புகளால் பரபரப்பாக நடத்தப்படுகிற குருபூசையாகும். தேர்தல் காலம் அல்லாததால் இம்முறை நடந்த விதம் இதை விளக்கமாக வெளிப்படுத்துகிறது.

துயரமான முடிவிற்கு மருதிருவர்களை வெகுவிரைவாக அழைத்துச்சென்ற புதுக்கோட்டை துரோகி தொண்டைமானின் துரோகத்தின் பங்காளிக்கூட்டத்தினர்தான் இன்று மருதிருவர்களின் குருபூசைக்கு அணிதிரளுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.

மருதிருவர்களின், தன்மானத்தையும், வீரத்தையும், நாட்டுப்பற்றையும் தூசி அளவுகூட சிந்தனையில் கொள்ளாத இந்த வெற்றுச் சாதி வெறி ஆரவாரகும்பல்தான் போதையிலே கூச்சலிடுகிறது, கும்மாளமிடுகிறது. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த போலீசோ, கத்தி ஓய்ந்துபோன கும்பலை அடித்துவிரட்டுவதைப் போல பாவனை செய்து முறுக்கேற்றிவிடுகிறது. வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் இல்லதாதால் ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

தனியார் பேருந்துகள் தங்களது போக்குவரத்தை நிறுத்திக் கொண்டாலும், அரசு பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை துணிச்சலாக எடுத்துச் சென்றனர். இருப்பினும் உடைக்கப்பட்ட பேருந்துகளைக் கொஞ்சமும் கவனியாமல் திரிந்தது போலீசு. இதனால் அதிருப்தி அடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு 7மணிக்கு மேல் பேருந்துகளை எடுக்க மறுத்து முறையிட்டனர். கிராமங்களுக்குச் செல்லும் பலபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மதுரை போகும் தனியார் பேருந்துகள் மேலூர் வழியாகச் சென்றன. ஊர் திரும்ப முடியாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொதுமக்கள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போலீசும், அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன. மஞ்சளும், பச்சையும், இணைந்த வண்ணங்களில் அவர்களின் சீருடைகள் இருந்தன. மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர். சேதுராமனின் சங்கக் கொடியும், ஸ்ரீதர் வாண்டையாரின் சங்கக் கொடியும் கட்டிய வாகனங்கள் தான் அதிகமாகச் சென்றன. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு கொடிகள் கட்டிய கார்கள் ஒன்றிரண்டே சென்றன. சென்ற வருடம் தேர்தல் காலம் ஆகையால் ஓட்டுக் கட்சிகளின் கொடிகள் கட்டிய கார்களும், ஒட்டுக்கட்சிகளின் தலைவர்களின் வருகையுமே மிக அதிகமாக இருந்தது.

நகரங்களில் நுழைந்தவுடன் சமீபத்தியச் சினிமா பாணியிலான ஆபாசக் குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஊர்வலமாய் வந்தனர். அவர்களின் ஆட்டத்திற்கு தங்களது பறை மற்றும் டிரம் செட் மூலம் தாளம் இசைத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள்.கொள்வினை கொடுப்பினை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் இரண்டு சாதியினரும் குத்து வெட்டுப் பலிகொடுத்தும் பலிகொடுக்கவும் காத்துக் கொண்டிருக்கிருக்கின்றனர். ஆனால் ஊர்வலத்தில் மூ.மு.கவினரோ, முக்குலத்தோர் வாழ்க என கோசம் போட்டுக் கொண்டு ஆடினர்.

இந்தக் குருபூசையின் பேரைச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிறிதளவு மட்டும் செலவு செய்யப்பட்டு (டீசல், உணவு, வாடகை, சாராயம்) மீதம் அப்படியே சுருட்டப்படுகிறது. பெரிய சங்கங்கள் முதல் கல்லுரி மாணவர்கள் வரை இதுதான் நிலை. சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை

வரும் ஆண்டுகளில் முறுகல், மோதல் எனத் துவங்கி பின்னர் பெரிய கலவரங்களும் நடைபெறலாம். எதிர்காலத்தில் அப்படியொரு நிலையை உருவாக்க சாதிய அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு பகைச் சூழ்நிலையும், பீதியும் மக்களிடையே நிலவவேண்டுமென்று ஆடு நனைவதைப் பார்த்து அழும் ஓநாய் போல அரசாங்கமும் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருகிறது.

இதைத்தடுக்க மருதிருவர்களின் வரலாற்றை அறிந்து, அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட, மருதிருவர்களின் பெயரால் மக்களை அழைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

- குருசாமி மயில்வாகனன்