நகுலன்–பூனை –ஹவி
1
கவிதையைப் படித்து முடித்ததும்
பக்கத்தில் வந்து நின்றது பூனை
என்ன படித்தாய்
பூனையைப் பற்றிப் படித்தேன்
பூனையைப் பற்றி என்ன படித்தாய்
பூனையா நிழலா
நிழலா பூனையா
எதுதான் கடைசி
பூனை பூனைதானா என்பது
பிராந்திக்கு மேலே மிதக்கும் பூனைப்பீ
இனி கண்ட இடத்தில் போகாதே
சொல்லி வைத்தால் அள்ளிப் போக
ஆட்கள் இருக்கிறார்கள் ஏராளம்
யாரு ராமச்சந்திரனா
ஆமாம் அதே ராமச்சந்திரந்தான்.
/////////////////////////////////
2
பூனை எலியைக் கவ்வும்
சரி!
கவ்வுமா? கெளவுமா?
ம்! ஒழுங்காச்சொல்லு!
பூனை எலியைக் கவ்வும்
அப்புறம்?
எலி பூனையைக் கவ்வாது
சரி!
கவ்வவே கவ்வாது
சரி!
கெளவவே கெளவாது
சரி!சரி!
பூனை எலியைத் தின்னும்
சரி!
எலி பூனையைத் தின்னாது
சரி!
எலி கருவாட்டைத் தின்னும்
சரி!
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹாஹா
பூனையும் கருவாட்டைத் தின்னும். நீ!
நீ தின்ன மாட்டாய்!
சரி விஷயத்திற்கு வா!
ம்!
பூனை எலியைக் கவ்வுமா?
உஸ்!
நா கரெக்டாச் சொல்றேன்
ம்!
பூனை எலியைக் ஹவ்வும்.
///////////////////////////
3
சொரனையற்ற இதுபோன்ற
பெரும்பாலான நேரங்களில்
பூனை எதிரே வந்து விடுகிறது
அவனால் தாங்க முடியவில்லை
பூனை கோபக்காரப் பூனை
பூனையை முடித்துவிட்டாயா
இனிப் புன்னாக்கை எழுது
பூனாவையும் பூவன்னாவையும்
தவிர வேறென்ன தெரியும்
நான் சிந்தனாவாதி என்கிறான்
கையில் டம்மி பிஸ்டல்
வழியத் தயாராயிருக்கும் ரத்தம்
பிளாஸ்டிக் டப்பாக்களை
மோந்து பார்க்கிறது பூனை
ரத்த வாசனை சூப்பர்
பூனை தின்கிற சோறெல்லாம்
இவன் வீட்டுச்சோறே
எவ்வித் தாவியதில்
பெரிய பெயிண்ட் டப்பாவில்
விழுந்து மூழ்கியது பூனை
அய்யோ
ரத்தம் வழியவழிய
டப்பாக்குள்ளிருந்து எழுந்தான் இவன்.
/////////////////////////////////////
No comments:
Post a Comment